Wednesday, January 23, 2008

பழநி

”ஈஸியா சீவுறதுக்கு இளநின்னு நெனைச்சியா? பழனிடா” பேரரசுவின் ட்ரேட்மார்க் பஞ்ச் டயலாக்கோடு தொடங்குகிறது படம். சின்ன தளபதி பரத் (?) சரியாக முளைக்காத மீசையை வேறு முறுக்கிவிட்டிருக்கிறார். தாவூ தீருது இவுங்களாண்ட...

அப்பாவுடன் கள்ள உறவு வைத்திருக்கும் பெண்ணை சிறுவயதிலேயே கொலை செய்து ஜெயிலுக்கு போகிறார் ஹீரோ. இதனால் குடும்பம் சிதறுகிறது. தாய் இறந்துவிடுகிறார். கொலை செய்து குடும்பத்துக்கு அவப்பழி ஏற்படுத்திய தம்பி மீது அக்கா கோபமாக இருக்கிறார். ஜெயிலில் இருந்து திரும்பிய தம்பி அக்காவை சமாதானப்படுத்த தம்பி என்பதை காட்டிக் கொள்ளாமலேயே அக்கா வீட்டில் வேலைக்காரனாக வேலை செய்கிறார். அக்கா புருஷனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு. பிரச்சினைகளுக்கு ‘ஆப்பு' வைத்து குடும்பம் ஒன்றாகிறது. சல்பேட்டாவுக்கு தொட்டுக்க ஊறுகாய் மாதிரி அவ்வப்போது ஹீரோயின். அரதபழசலான மகாபாரத காலத்து கதைக்கு ஆங்காங்கே தொடர்பில்லாமல் ஆக்ஷன் பிட்டுகளை அள்ளித் தெளித்து கொத்து பரோட்டா போட்டுத் தந்திருக்கிறார் பேரரசு.

ரோடு ரோலர் சைஸில் குஷ்பு ஹீரோவுக்கு அக்காவாக வருகிறார். பரத்துக்கு நன்றாக டான்ஸ் ஆட வருகிறது. அடியாள்களை புரட்டியெடுப்பதும் ஓக்கே. படத்தின் ஒரே ப்ளஸ் பாயிண்டாக ஐஸ்வர்யாவை (ராய் அல்ல) சொல்லலாம். கட்டை குரலில் மிரட்டுகிறார். சப்பென்று உயிரை விட்டு விடுகிறார்.

படத்தில் தனியாக காமெடியன்கள் யாரும் இல்லையென்ற குறையை இயக்குனரே போக்கிவிடுகிறார். போலிஸ் அதிகாரியாக ‘திருத்தணி' என்ற பெயரில் அவர் இடம்பெறும் ஒரே காட்சி வயிறுகுலுங்க சிரிக்க வைக்கிறது. பாக்யராஜ் போல இருந்துகொண்டு பேரரசு பஞ்ச் டயலாக் பேசுவதைப் பார்க்கும்போது தமிழ் திரையுலகம் எதிர்காலத்திலும் கூட ஹாலிவுட் ரேஞ்சுக்கு போக வாய்ப்பில்லை என்றே அறிய முடிகிறது.

”இது ஆரம்பமில்லே.. பூகம்பம்” மாதிரி பட்டாசு டயலாக்குகளும், ”பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா சரியான ஆப்பு வைத்தாயப்பா” ரேஞ்சு பேக்கிரவுண்டு குத்துப்பாட்டுக்களும் தியேட்டரை விட்டு எல்லோரையும் கதிகலங்கி ஓடவைக்கிறது. படம் பார்க்கும் சில லேடீஸ் கூட புடவையை லுங்கி மாதிரி மடித்து கட்டிக்கொண்டு தம் அடிக்க வெளியே செல்லுமளவுக்கு பாடல்கள். இதே பார்முலாவில் தொடர்ந்து படமெடுத்துக் கொண்டிருந்தால் பேரரசுவை நம்பி படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு கோவணம் கூட மிஞ்சாது என்பது உறுதி.

No comments: